வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி சிக்கியது


வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி சிக்கியது
x
தினத்தந்தி 8 Aug 2018 10:45 PM GMT (Updated: 8 Aug 2018 10:34 PM GMT)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி சிக்கியது.

வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அவற்றை பார்த்து ரசிக்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து, செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூரு ஸ்ரீ சாம ராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 2 ஜோடி கோடிட்ட கழுதைப்புலி உள்ளிட்ட சில விலங்குகள் கொண்டுவரப்பட்டன.

மைசூரில் இருந்து பெறப்பட்ட கோடிட்ட கழுதைப்புலிகளை வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள விலங்குகள் மருத்துவமனை அருகே தனியாக ஒரு கூண்டில் அடைத்து வைத்து கழுதைப்புலிகளுக்கு ஏதாவது நோய் தொற்றுகள் உள்ளதா? என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வந்தனர். இந்த கழுதைப்புலிகள் 3 வார மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த 3 வயது உடைய ஆண் கழுதைப்புலி ஒன்று சற்றும் எதிர்பாராத வகையில் கூண்டில் கம்பிகள் இடையே உள்ள வழியை பயன்படுத்தி தப்பி ஓடியது. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கழுதைப்புலி மாயமாகி இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தப்பிய ஓடிய கழுதைப்புலியை இரவு நேரம் வருவதற்குள் பிடிக்க முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை. கழுதைப்புலி தப்பி ஓடிய தகவல் பூங்கா உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் தப்பி ஓடிய கழுதைப்புலியை இரவுக்குள் பிடிப்பதற்காக பூங்காவில் இருள் சூழ்ந்த பகுதியில் மின்விளக்குகளை அமைத்தனர். பின்னர் தப்பி ஓடிய கழுதைப்புலியை பிடிப்பதற்காக 5–க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு கூண்டை வைத்து அதில் கழுதைப்புலி சாப்பிடுவதற்காக மாட்டு இறைச்சியை தொங்கவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து பூங்கா முழுவதும் பல்வேறு இடங்களில் கேமராக்களை பொருத்தி சி.சி.டி.வி மூலம் கழுதைப்புலியின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை ஊழியர்கள் இரவு முழுவதும் கண்காணித்து வந்தனர். மேலும் கழுதைப்புலியை பூங்கா வளாகத்திற்குள் உள்ள காட்டுப்பகுதியிலும் தேடினர்.

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் தப்பி ஓடிய கழுதைப்புலி பூங்கா மருத்துவமனை அருகே கூண்டில் வைக்கப்பட்டு இருந்த மாட்டு இறைச்சியை சாப்பிடுவதற்காக வந்தது.

இதைப்பார்த்த பூங்கா ஊழியர்கள் கழுதைப்புலியை லாவகமாக கூண்டிற்குள் அடைத்தனர். கழுதைப்புலியின் உடலில் பல்வேறு இடங்களில் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது. இந்த காயங்களுக்கு பூங்கா மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து தப்பி ஓடி, பின்னர் சிக்கிய கழுதைப்புலியை மட்டும் தனியாக ஒரு இரும்பு கூண்டில் அடைத்து வைத்து பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தப்பி ஓடிய கழுதைப்புலி சிக்கியதால் பூங்கா ஊழியர்களும், அதிகாரிகளும் நிம்மதி அடைந்தனர்.


Next Story