திருமணத்துக்கு காதலனின் பெற்றோர் மறுப்பு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணத்துக்கு காதலனின் பெற்றோர் மறுப்பு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Aug 2018 11:15 PM GMT (Updated: 9 Aug 2018 7:02 PM GMT)

திருமணத்துக்கு காதலனின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் மனம் உடைந்த இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி,

மதுரவாயலை அடுத்த புளியம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு(வயது 42). இவருடைய மகள் சரண்யா(17). இவர், பிளஸ்–2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட சரண்யா நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை திறந்து பார்த்தபோது சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகளின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தற்கொலை செய்து கொண்ட சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

அதில் சரண்யாவும், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற ஜாக்(21) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர், அடிக்கடி சரண்யாவின் பெற்றோர் இல்லாதநேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று தனியாக சந்தித்துபேசி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவிந்த்–சரண்யா இருவரும் சந்தித்து பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அரவிந்தை கண்டித்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறிந்த சரண்யாவின் பெற்றோர், தங்கள் மகளை அரவிந்துக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இது தெடர்பாக அரவிந்தின் பெற்றோரிடம் சம்மதம் கேட்க சென்றனர். ஆனால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரவிந்தின் பெற்றோர், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த சரண்யா, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Next Story