தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம்


தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம்
x
தினத்தந்தி 9 Aug 2018 10:00 PM GMT (Updated: 9 Aug 2018 8:48 PM GMT)

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் 50 சதவீதம் வரை மானியம் பெற்று பயன் அடையலாம் என கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் குறைந்த தண்ணீரில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய காய்கறிகள் மற்றும் பழப்பயிர்கள், மலர்கள், சுவை தானிய பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு 40 அல்லது 50 சதவீத மானியத்தில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு விவசாயி 4 எக்டேர் வரை இந்த திட்டத்தில் மானியம் பெறலாம். இந்த திட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள், குழித்தட்டு நாற்றுகள் மற்றும் இதர இடு பொருட்கள் எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

இதேபோல் மா பயிரிட ஒரு எக்டேருக்கு ரூ.9 ஆயிரத்து 840 மதிப்பீட்டிலும், கொய்யாவிற்கு ரூ.17 ஆயிரத்து 599 மதிப்பீட்டிலும், பப்பாளி சாகுபடிக்கு ரூ.23 ஆயிரம் மதிப்பீட்டிலும், மிளகாய்க்கு ரூ.12 ஆயிரம் வீதமும், மல்லிகைக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பீட்டிலும் நடவு செடிகள் மற்றும் இதர இடு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. “ஸ்மார்ட் சிவகங்கா“ செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பயன்கள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story