பாலியல் பலாத்காரம் செய்து 6 வயது சிறுமி கொலை: தாத்தா, சித்திக்கு ஆயுள் தண்டனை


பாலியல் பலாத்காரம் செய்து 6 வயது சிறுமி கொலை: தாத்தா, சித்திக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 10 Aug 2018 10:30 PM GMT (Updated: 10 Aug 2018 6:14 PM GMT)

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தாத்தா- உடந்தையாக இருந்த சித்திக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த ஜடையன்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிகவுண்டர் (வயது 66). இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (35), லாரி டிரைவர். இவரது முதல் மனைவி தீபா. கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு 6 வயதில் மகள் இருந்தாள். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கும், முத்துலட்சுமி (23) என்பவருக்கும் இரண்டாவதாக திருமணம் நடந்தது.

கோபாலகிருஷ்ணன் லாரி டிரைவராக வேலை செய்து வந்ததால், அடிக்கடி வெளியூர் சென்றுவிட்டு, மாதத்திற்கு ஒருமுறை மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனிடையே பழனிகவுண்டருக்கும், மருமகள் முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் வீட்டிலேயே உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி இரவு பழனிகவுண்டர், முத்துலட்சுமி இருவரும் உல்லாசமாக இருப்பதற்கு, கோபாலகிருஷ்ணனின் முதல் மனைவியின் 6 வயது மகள் இடையூறாக இருக்கிறாள் என்று முத்துலட்சுமி, பழனி கவுண்டரிடம் கூறினார்.

இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது 6 வயது பேத்தியை தூக்கி சென்று அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் வைத்து பழனிகவுண்டர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மயங்கிய நிலையில் இருந்த அந்த சிறுமியை, முத்துலட்சுமி துணியால் சுற்றி கொடுக்க, பழனி கவுண்டர் தூக்கி சென்று அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் வீசி கொலை செய்தார்.

இது குறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிகவுண்டர் மற்றும் அவரது மருமகள் முத்துலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில் பேத்தி என்றும் பாராமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு பழனிகவுண்டருக்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்த குற்றத்திற்காக மற்றொரு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார். இதற்கு உடந்தையாக இருந்த முத்துலட்சுமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார். முத்துலட்சுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story