கவர்னர் கிரண்பெடி நடவடிக்கையால் புதுப்பொலிவு பெறும் அரசு நடுநிலைப்பள்ளி


கவர்னர் கிரண்பெடி நடவடிக்கையால் புதுப்பொலிவு பெறும் அரசு நடுநிலைப்பள்ளி
x
தினத்தந்தி 10 Aug 2018 11:00 PM GMT (Updated: 10 Aug 2018 9:08 PM GMT)

கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கையால் மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி புதுப்பொலிவு பெற்று வருகிறது. இதற்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருக்கனூர்,

கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் புதுவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டு கிராமத்துக்கு சென்று கிரண்பெடி ஆய்வு செய்து, கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் பின்புறம் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்கவேண்டும், மதிய நேரத்தில் பள்ளி மாணவர்கள் உட்கார்ந்து சாப்பிட இடவசதி இல்லை என்று பல்வேறு குறைகளை தெரிவித்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதி அளித்தார்.

இந்த அரசு பள்ளியில் மண்ணாடிப்பட்டு சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த 149 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 11 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த பள்ளியை சீரமைக்க கவர்னர் மாளிகையில் இருந்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர் பள்ளியை ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். பள்ளியின் பின்புறம் புதர்மண்டி கிடந்த வளாகத்தை சுத்தம் செய்து, மரக்கன்றுகள் நடப்பட்டது.

பள்ளி சுவர்களுக்கு வண்ணம் பூசப்பட்டு, மதிய நேரத்தில் மாணவர்கள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக பள்ளி வளாகத்தில் சிமெண்டு தரை தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சுவரை தாண்டி வெளிநபர்கள் பள்ளிக்குள் நுழைய முடியாதபடி, சுவரின் மீது கூர்மையான கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பள்ளியின் பின்புறம் பழுதடைந்துள்ள கட்டிடத்தை கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளியை பார்வையிட்டு, வகுப்பறையில் கற்றல் ஓவியங்கள் வரைந்து தருவதாக உறுதியளித்து உள்ளனர்.

இந்த நிலையில் கவர்னர் அலுவலகத்துக்கு பள்ளி ஆசிரியர்களை வரவழைத்து, மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை கவர்னர் கிரண்பெடி வழங்கினார். அப்போது பள்ளிக்கு தேவையான அறிவியல் உபகரணங்களை வழங்க கவர்னரிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினர். அப்போது, மற்றொரு தொண்டு நிறுவனம் சார்பில் அதனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதியளித்தார்.

கவர்னர் கிரண்பெடி நடவடிக்கையால் மண்ணாடிப்பட்டு அரசு பள்ளி தற்போது புதுப்பொலிவு பெற்று வருகிறது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கவர்னருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 

Next Story