ஸ்கூட்டர்-மோட்டார்சைக்கிள் மோதல்: மீன் வியாபாரி பரிதாப சாவு


ஸ்கூட்டர்-மோட்டார்சைக்கிள் மோதல்: மீன் வியாபாரி பரிதாப சாவு
x
தினத்தந்தி 10 Aug 2018 10:00 PM GMT (Updated: 10 Aug 2018 9:20 PM GMT)

பெருந்துறை அருகே ஸ்கூட்டர்-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெருந்துறை,

பெருந்துறை அருகே உள்ள சுள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 30). இவருடைய மனைவி ரேவதி (25). இவர்களுக்கு நிஷாந்த் (4) என்ற மகன் உள்ளான். சந்தோஷ்குமார் பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரிடம் சுள்ளிபாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரும் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார், பெருந்துறை அருகே உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டில் திருவேங்கடம்பாளையம்புதூர் பிரிவில் உள்ள பெட்ரோல் பங்குக்கு ஸ்கூட்டரில் சென்றுகொண்டு இருந்தார். அவர் தன்னுடன் ஸ்கூட்டரில் ஸ்ரீதரையும் அழைத்துச்சென்றார். பின்னர் அவர்கள், ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு மீண்டும் பெருந்துறை சுள்ளிபாளையத்துக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். திருவேங்கடம்பாளையம் பிரிவில் சென்றபோது எதிரேவந்த மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து சந்தோஷ்குமார், ஸ்ரீதர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சுள்ளிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார் (28), கவின் (29) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story