திருப்பூரில், அனுமதியின்றி சாயக்கழிவுநீரை வெளியேற்றிய 14 பிரிண்டிங், சாய நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு


திருப்பூரில், அனுமதியின்றி சாயக்கழிவுநீரை வெளியேற்றிய 14 பிரிண்டிங், சாய நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 10:45 PM GMT (Updated: 10 Aug 2018 9:40 PM GMT)

திருப்பூரில், அனுமதியின்றி சாயக்கழிவுநீரை வெளியேற்றிய 14 பிரிண்டிங், சாய நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான சாய ஆலைகள், பிரிண்டிங், பிளச்சிங் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெறாத ஆலைகள் மட்டும் அல்லாமல் அனுமதி பெற்ற சாய ஆலைகளும் சட்ட விதிகளை மீறி சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றி வருகின்றன.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்களின் இயக்கத்தை நிறுத்துவதுடன், பல நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைத்தும் வருகின்றனர். இந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் செந்தில் விநாயகம் தலைமையில் உதவி பொறியாளர்கள் குழுவினர் நேற்று முன்தினம் திருப்பூருக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முருகம்பாளையம் தரைப்பாலம் அருகே சின்னக்கரை ஓடை பகுதியில் செயல்பட்டு வரும் 2 சாய நிறுவனங்கள் சுத்திகரிக்காமல் சாயக்கழிவுநீரை வெளியேற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த நிறுவனங்களிலும் சாயநீரை சுத்திகரிப்பு செய்வதற்கான கட்டமைப்புகளும் முறையாக இல்லாதது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த இரு நிறுவனங்களின் இயக்கத்தை நிறுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல, பறக்கும்படை அதிகாரிகள் திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டனர். அப்போது திருப்பூர் வடக்கு, தெற்கு பகுதிகளில் நடத்திய ஆய்வில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமலும், கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய பல்வேறு பகுதிகளில் உள்ள 12 பிரிண்டிங் நிறுவனங்களும் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க ஒருங்கிணைப்பு குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து மின்வாரிய அதிகாரிகள் மொத்தம் 14 நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டித்தனர். 

Next Story