சிலை மாயமானதாக புகார்: ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை


சிலை மாயமானதாக புகார்: ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை
x
தினத்தந்தி 10 Aug 2018 9:47 PM GMT (Updated: 10 Aug 2018 9:47 PM GMT)

ஸ்ரீரங்கம் கோவில் சிலை மாயமானதாக கொடுக்கப்பட்ட புகார் குறித்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் 13-ந் தேதி நேரில் விசாரணை நடத்துகிறார்கள்.

திருச்சி, 



தமிழகத்தில் உள்ள கோவில்களில் புராதான சிலைகள் திருட்டு போனதாகவும், பெரும்பாலான சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டதாகவும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. இந்த புகார்கள் குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிலை திருட்டு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிலை திருட்டு வழக்குகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரித்து வருகிறார். இந்த வழக்குகள் தொடர்பாக அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜ நரசிம்மன். இவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் சிலை மாயமானதாகவும், உற்சவர்சிலை, கோவிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் ஸ்ரீரங்கம் கோவிலில் சிலைகள் மாயமானது, சேதப்படுத்தப்பட்டது குறித்து கொடுக்கப்பட்ட புகார் மீது 6 வாரத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிலை திருட்டு தடுப்புபிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டனர். கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் 13-ந் தேதி(திங்கட்கிழமை) ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story