திருவாடானை அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவரை நியமிக்க கோரிக்கை


திருவாடானை அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவரை நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2018 10:30 PM GMT (Updated: 10 Aug 2018 10:14 PM GMT)

திருவாடானை அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் சுமார் 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயத்தையும், மீன்பிடி தொழிலையும் நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பொதுமக்கள் இங்கு அதிக அளவில் உள்ளனர். இவர்கள் திருவாடானையில் உள்ள தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது இங்கு 5 டாக்டர்கள் பணியில் உள்ளனர். ஆனால் மகப்பேறு சிகிச்சை அளிக்க பெண் மருத்துவர் இல்லாததால், கர்ப்பிணி பெண்களின் பிரசவத்திற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதி மக்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்க்க நேரிடுகிறது.

ஏழை-எளிய மக்கள் பிரசவத்திற்காக அதிக அளவு பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. அப்படியே செலவு செய்தாலும் பெரும்பாலான பிரசவம் அறுவை சிகிச்சை மூலமே நடைபெறுகிறது.


இந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் அறுவை சிகிச்சை இல்லாமல் நடைபெற்று வருகிறது. அங்கு போதிய படுக்கை வசதிகள், கட்டிட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அங்கு செல்ல சிரமப்படுகின்றனர். தாலுகா தலைமை மருத்துவமனையில் அவசர காலத்திற்கு உரிய அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் இங்கு மகப்பேறு பெண் மருத்துவர் பணியிடம் ஒதுக்கப்படாததால் இங்கு இருந்த மகப்பேறு மருத்துவ உதவியாளர், ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் மாற்று பணியாக பணிபுரிந்து வருகிறார்.

இதனால் இந்த பகுதி மக்கள் தேவகோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் போன்ற வெளியூர்களுக்கு சென்று தனியார் மருத்துவமனையில் அதிக பணம் செலவு செய்து பிரசவம் பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து திருவாடானை தாலுகா தலைமை அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு பெண் மருத்துவர் பணியிடம் ஒதுக்கீடு செய்து விரைவில் நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் குருசாமி அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Next Story