‘கொசு நோய்’, கொசுக்களால் ஒழிப்பு!


‘கொசு நோய்’, கொசுக்களால் ஒழிப்பு!
x
தினத்தந்தி 11 Aug 2018 11:54 AM GMT (Updated: 11 Aug 2018 11:54 AM GMT)

ஆஸ்திரேலிய நகரம் ஒன்றில், கொசுக்களால் பரவும் நோயை கொசுக்களைக் கொண்டே கட்டுப்படுத்தியிருக்கின்றனர்.

டெங்கு காய்ச்சல் பரவலுக்கு கொசுக்கள் காரணமாக உள்ள நிலையில், கொசுக்கள் மூலமாகவே ஒரு நகரம் முழுதும் டெங்கு காய்ச்சலை அந்த ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தியுள்ளனர்.

இயற்கையாகவே தொற்றும் பாக்டீரியாக்களை உடைய, ஆய்வகங்களில் வளர்க்கப்பட்ட கொசுக்கள் டவுன்ஸ்வைல் நகரத்தில் வெளிவிடப்பட்டன. அந்தக் கொசுக்கள் அந்நகரின் பொது வெளியில் உள்ள கொசுக்களுடன் உறவு கொண்டன.

அதன் மூலம் டெங்கு காய்ச்சல் தொற்றாமல் தடுக்கும் ‘வோல்பேச்சியா’ என்ற பாக்டீரியா அந்நகரில் பரவியது. இதனால் கடந்த 2014-ம் ஆண்டு முதல் டவுன்ஸ்வைல் நகரத்தில் யாருக்கும் டெங்குத் தொற்று ஏற்படவில்லை.

கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா, மலேரியா போன்ற நோய்களையும் இதே வழிமுறை மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

‘‘நம்மிடம் ஏற்கனவே இருக்கும் வழிமுறைகள் எதுவும் இந்த நோய்களைக் கட்டுப்படுத்தவில்லை’’ என்று கூறும் உலக கொசுக்கள் திட்டத்தின் இயக்குநர் ஸ்காட் ஓ நீல், ‘‘இந்த வழிமுறை, கொசுக்களால் பரவும் நோய்கள் மீது பெரிய தாக்கத்தை உண்டாக்கப்போகிறது. மிகவும் நம்பிக்கை தருவதற்கான முதல் அறிகுறியாக இந்த ஆய்வு உள்ளது’’ எனக் கூறுகிறார்.

தொடர்ந்து நான்கு மழைக் காலங்களில் வோல்பேச்சியா பாக்டீரியாக்களைக் கொண்டுள்ள கொசுக்களை, சுமார் 1.80 லட்சம் மக்கள் வசிக்கும் 66 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள, குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள டவுன்ஸ்வைல் நகரில் ஆய்வாளர்கள் வெளியே விட்டனர்.

இந்தத் திட்டத்துக்கு அங்குள்ள மக்கள் பெரும் ஆதரவளித்தனர். இந்தச் சிறப்பு வாய்ந்த கொசுக்களை, உள்ளூர் கொசுக்கள் இருக்கும் பகுதிகளில் பள்ளி மாணவர்களும் வெளிவிட்டனர்.

‘‘சராசரியாக ஒரு நபருக்கு 15 ஆஸ்திரேலிய டாலர் செலவாகும் இந்தத் திட்டம் மூலம், மிகவும் வேகமாகவும், குறைந்த செலவிலும், திறன் மிக்க வகையிலும் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று டவுன்ஸ்வைல் நகரில் நிகழ்த்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது’’ என்று பேராசிரியர் ஓ நீல் கூறியுள்ளார்.

இந்தத் திட்டம் தற்போது 11 நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வோல்பேச்சியா பாக்டீரியாக்களை உலகின் மிகவும் ஏழ்மை நிலவும் பகுதிகளில், நபர் ஒருவருக்கு தலா ஓர் அமெரிக்க டாலர் எனும் குறைந்த செலவில் பரப்பி நோய்க் கட்டுப்பாட்டில் ஈடுபட இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 4 லட்சம் பேர் வசிக்கும் இந்தோனேசியாவின் யோக்யகர்தா நகரில் தற்போது இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, கொசுக்களின் நோய்களை கொசுக்களாலேயே ஒழிக்கிறார்கள்! 

Next Story