தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி: சென்னையில் அனைத்து கட்சியினர் அமைதி பேரணி


தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி: சென்னையில் அனைத்து கட்சியினர் அமைதி பேரணி
x
தினத்தந்தி 11 Aug 2018 11:00 PM GMT (Updated: 11 Aug 2018 7:02 PM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து கட்சியினர் அமைதி பேரணியாக சென்றனர்.

திருவொற்றியூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி.மு.க.வினர் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு தலைமையில் திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் இருந்து கருப்புசட்டை அணிந்து, கருப்பு கொடி ஏந்தியபடி திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக அமைதி பேரணி சென்றனர்.

பின்னர் திருவொற்றியூர் டோல்கேட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சமத்துவ மக்கள் கழகம் உள்பட அனைத்து கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அனைத்து கட்சியினர் அமைதி பேரணி மேற்கு சைதாப்பேட்டை சாரதிநகர் பஸ் நிலையம் அருகில் இருந்து தொடங்கி ஜோன்ஸ் சாலை வழியாக கருணாநிதி பொன்விழா வளைவில் நிறைவடைந்தது.

தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து தாம்பரம் சண்முகம் சாலை வரை நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.

பல்லாவரம் நகர தி.மு.க. சார்பில் பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தலைமையில் அஸ்தினாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ராஜேந்திரபிரசாத் சாலை, ஜி.எஸ்.டி. சாலை, எம்.ஐ.டி. மேம்பாலம் வழியாக குரோம்பேட்டை பஸ் நிலையம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

இதில் தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, மகேந்திரன், குரோம்பேட்டை நாசர் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்துகொண்டனர். பின்னர் குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்திற்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஆவடியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. ஆ.கிருஷ்ணசாமி உள்பட தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தே.மு. தி.க. கம்யூனிஸ்டு, ச.ம.க., தி.க., பா.ம.க., ம.ம.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரவி தலைமையில் அடையாறில் குடிநீர்தொட்டி சிக்னலில் இருந்து எல்.பி. சாலை வழியாக திருவான்மியூர் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சியினர் கலந்துகொண்டனர்.

Next Story