சேலத்தில் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான போட்டி தேர்வு


சேலத்தில் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான போட்டி தேர்வு
x
தினத்தந்தி 11 Aug 2018 11:07 PM GMT (Updated: 11 Aug 2018 11:07 PM GMT)

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான போட்டி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்டது.

சேலம்,

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் 145 தேர்வர்கள் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் 135 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 10 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த மையத்தில் போட்டிதேர்வுகள் முறையாக நடக்கிறதா? என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார். பின்னர், அவர் ஒவ்வொரு அறைக்கும் சென்று தேர்வு எழுதும் நபர்களை பார்வையிட்டார். தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடந்தது.

தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும்படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றதை தொடர்ந்து கண்காணித்தனர். முன்னதாக தேர்வு எழுத வந்த விண்ணப்பதாரர்கள், நோட்டுகள், கால்குலேட்டர், கைக்கெடிகாரம், செல்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எதையும் உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்களை தேர்வுத்துறை கண்காணிப்பு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்த பிறகே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதித்தனர்.

Next Story