கணவரை விட்டு மகள் பிரிந்து வந்ததால் மனவேதனை: தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


கணவரை விட்டு மகள் பிரிந்து வந்ததால் மனவேதனை: தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 12 Aug 2018 10:15 PM GMT (Updated: 12 Aug 2018 8:00 PM GMT)

கணவரை விட்டு மகள் பிரிந்து வந்ததால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கொரடாச்சேரி,

கொரடாச்சேரி அருகே உள்ள பெருந்தரக்குடி ஊராட்சி மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). போர்வெல் அமைக்கும் தொழிலாளி. இவருடைய மகள் கவிதா (22). இவருக்கும், மன்னார்குடி கரியாமங்கலம் கிராமத்தை சேர்ந்த நாகப்பன் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில நாட்களிலேயே கவிதாவிடம், நாகப்பன் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் கவிதா, கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார். தனது மகளின் வாழ்க்கை இப்படி அமைந்து விட்டதே என செல்வராஜ், கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செல்வராஜின் மனைவி இந்திராணி அளித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவள்ளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story