சீர்காழியில் அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் விதைநெல் வழங்க வேண்டும்


சீர்காழியில் அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் விதைநெல் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Aug 2018 10:15 PM GMT (Updated: 12 Aug 2018 8:12 PM GMT)

சீர்காழியில் அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் விதை நெல் வழங்க வேண்டும் என்று த.மா.கா. கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சீர்காழி,

சீர்காழியில் த.மா.கா. சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் சுந்தரவடிவேலு, பண்டரிநாதன், நாகேந்திரன், நகர தலைவர் கனிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், மாநில இளைஞரணி பொது செயலாளர் கார்த்திக் ஆகியோர் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர்.

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:- அதிக அளவில் இளைஞர்களை கட்சியில் உறுப்பினராக சேர்ப்பது, அனைத்து வார்டுகளிலும் தேர்தல் முகவர்களை நியமனம் செய்வது, தடையின்றி கட்டுமான பணிக்கு தேவையான மணல் கிடைக் கவும், கட்டுமான பொருட் களின் விலை உயர்வை தடுத்து நிறுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வது.

சீர்காழி வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் விதை நெல் வழங்க வலியுறுத்துவது, வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள மானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரியபடுத்த வேண்டும். அனைத்து பயணிகள் பஸ்களும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும். சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். சீர்காழியில் உள்ள அனைத்து வங்கி ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னமரைக்காயர், தம்பிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்டார இளைஞர் அணி தலைவர் சுரேஷ் நன்றி கூறினார். 

Next Story