எதிர்கோஷ்டியினரை கொலை செய்ய ஆயுதங்களுடன் வந்த பிரபல ரவுடி கைது


எதிர்கோஷ்டியினரை கொலை செய்ய ஆயுதங்களுடன் வந்த பிரபல ரவுடி கைது
x
தினத்தந்தி 12 Aug 2018 10:15 PM GMT (Updated: 12 Aug 2018 8:29 PM GMT)

எதிர்கோஷ்டியினரை கொலை செய்யும்நோக்கில் ஆயுதங்களுடன் வந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ்குமார், ஆதர்ஷ் மற்றும் போலீசார் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர், போலீசாரை கண்டதும் கீழே இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தை தாண்டி தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்றனர். அதில் கால் தவறி கீழே விழுந்த ஒருவரை மட்டும் போலீசார் மடக்கிபிடித்தனர். மற்றொருவர் தப்பிச்சென்று விட்டார்.

பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், புளியந்தோப்பு சூளை அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேஷ் என்ற ஜங்கிலி கணேஷ் (வயது 32) என்பதும், பிரபல ரவுடியான அவர் மீது புளியந்தோப்பு, வேப்பேரி, பேசின்பிரிட்ஜ், ஓட்டேரி, வியாசர்பாடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 4 கொலை, 10 கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 26 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

ஏற்கனவே 9 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். 2013-ம் ஆண்டு புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் விஜி என்ற விஜய் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜங்கிலி கணேஷ் முக்கிய குற்றவாளி ஆவார்.

அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக விஜியின் கூட்டாளியான பட்டாளம் மீன் மார்க்கெட் பகுதியை சேர்ந்த நானா(30) என்பவர் தலைமையில் எதிர்க்கோஷ்டியினர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதை அறிந்த ஜங்கிலி கணேஷ், அதற்கு முன்பாக எதிர்கோஷ்டியினரை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் தனது கூட்டாளியான டி.பி.சத்திரத்தை சேர்ந்த சந்தோஷ்ராஜா(30) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

ஜங்கிலி கணேசை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 அரிவாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கீழே விழுந்ததில் அவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய அவருடைய கூட்டாளியான சந்தோஷ்ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story