குமரி மாவட்டத்தில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்


குமரி மாவட்டத்தில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
x
தினத்தந்தி 12 Aug 2018 10:30 PM GMT (Updated: 12 Aug 2018 9:57 PM GMT)

குமரி மாவட்டத்தில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுகிறார்கள்.

நாகர்கோவில்,

நாடு முழுவதும் வருகிற 15–ந் தேதி சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதே போல் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு பள்ளி மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசிய கொடியேற்றுகிறார். அதன் பிறகு நடைபெறும் போலீசாரின் அணிவகுப்பை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஏற்றுக்கொள்கிறார். அதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பின்னர் மாணவ–மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவையொட்டி எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் விழாவின் போது ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மைதானத்தை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மோப்பநாய் மூலம் சோதனையும் நடத்தப்பட்டது. அதோடு வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு நடத்த உள்ளனர்.

சுதந்திர தின விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இந்த பணியில் சுமார் 1,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க கடலோர பாதுகாப்பு படை போலீசார், படகுகள் மூலம் கடலில் ரோந்து சென்று வருகிறார்கள். கடலோர பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் போலீசார் இரவில் வழக்கமாக மேற்கொள்ளும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியாக யாரேனும் தங்கியுள்ளனரா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் முக்கிய இடங்களிலும், மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட உள்ளது. தண்டவாளங்கள் மற்றும் ரெயில்வே பாலங்களில் வெடிகுண்டு ஆய்வுக்கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்படுறது. மொத்தத்தில் குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story