பட்டுக்கோட்டையில் பயங்கரம்: ஆயுதங்களுடன் ரகளை செய்த ரவுடியை பொதுமக்களே அடித்து கொன்றனர்


பட்டுக்கோட்டையில் பயங்கரம்: ஆயுதங்களுடன் ரகளை செய்த ரவுடியை பொதுமக்களே அடித்து கொன்றனர்
x
தினத்தந்தி 14 Aug 2018 11:15 PM GMT (Updated: 14 Aug 2018 5:12 PM GMT)

பட்டுக்கோட்டையில், பயங்கர ஆயுதங்களுடன் ரகளை செய்த ரவுடியை பொதுமக்களே சேர்ந்து அடித்துக் கொன்றனர். அவருடைய நண்பர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சாந்தாங்காடு வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகன் தம்பா கார்த்திக் (வயது 26) ரவுடி. அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் டேனியல்(26). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பட்டுக்கோட்டை நரியம்பாளையம் தெருவில் உள்ள பெட்டிக்கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளனர்.

இதைப்பார்த்து அந்த கடையின் அருகில் இருந்த ராமச்சந்திரன், ஏன் கடைக்காரரிடம் தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சத்தம் கேட்டு உள்ளது. அந்த சத்தம் கேட்டு அந்த தெருவில் இருந்தவர்களும் அங்கு வந்து பெட்டிக்கடைக்காரருக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த தம்பா கார்த்தியும், டேனியலும் அந்த கடையில் இருந்து வேகவேகமாக திரும்பிச்சென்று விட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் மேலும் சிலருடன் அரிவாள், கம்பு உள்பட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து உள்ளனர். அவர்கள் அங்கிருந்த ராமச்சந்திரன் மற்றும் தெருவாசிகளை தாக்கியுள்ளனர்.

 இதனால் வேறு வழியில்லாமல் ராமச்சந்திரன் மற்றும் தெருவாசிகள் ஒன்று சேர்ந்து கம்பு, உருட்டுக்கட்டைகளால் ரவுடி கார்த்தி, அவருடைய நண்பர் டேனியல் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர். பொதுமக்கள் தாக்கியதில் ரவுடி தம்பா கார்த்தி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.


டேனியல் படுகாயம் அடைந்தார். அவர்களுடன் வந்த மற்றவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த டேனியல் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், ராமச்சந்திரன், அண்ணாத்துரை, ரமேஷ்காந்த், முத்துகிருஷ்ணன் உள்பட சிலரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தையொட்டி கொலை நடந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஆயுதங்களுடன் ரகளை செய்த ரவுடியை பொதுமக்களே சேர்ந்து அடித்துக்கொன்ற சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story