இலவச பஸ் பாஸ் வழங்க கோரி கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு


இலவச பஸ் பாஸ் வழங்க கோரி கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2018 11:00 PM GMT (Updated: 14 Aug 2018 5:16 PM GMT)

இலவச பஸ் பாஸ் வழங்க கோரி கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அருண் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். கல்லூரியில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கல்லூரி முதல்வரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்னும் 2 வாரத்திற்குள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என்றால் கல்லூரிக்குள் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பின்னர் மாணவ, மாணவிகளில் பாதி பேர் மீண்டும் வகுப்புகளுக்கு சென்றனர். மீதமுள்ளோர் வீட்டிற்கு சென்றனர்.

Next Story