சுதந்திர தின விழா: ரூ.10¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ரோகிணி வழங்குகிறார்


சுதந்திர தின விழா: ரூ.10¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ரோகிணி வழங்குகிறார்
x
தினத்தந்தி 14 Aug 2018 11:30 PM GMT (Updated: 14 Aug 2018 10:30 PM GMT)

சேலத்தில் இன்று நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் கலெக்டர் ரோகிணி தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த விழாவில், ரூ.10¾ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்குகிறார்.

சேலம்,

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று (புதன் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் ரோகிணி காலை 9.20 மணிக்கு தேசியகொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் தியாகிகளை கவுரவித்து, சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்க உள்ளார்.

விழாவில் 12 துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகளையும் கலெக்டர் ரோகிணி வழங்குகிறார். சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்பார்கள்.

இதைத்தொடர்ந்து வாழப்பாடி ஸ்ரீகோகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சின்னப்பம்பட்டி கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி, சேலம் சி.எஸ்.ஐ. குட்ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏத்தாப்பூர் அபிநவம் ஏகலைவா பெண்கள் மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மற்றும் மேட்டூர் அணை மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளை சேர்ந்த 648 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

இதையொட்டி நேற்று காந்தி விளையாட்டு மைதானத்தில் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்றது. இதை பார்வையிட்ட கலெக்டர் ரோகிணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் ஆகியோர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.

சுதந்திர தின விழாவையொட்டி சேலம் மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஆங்காங்கே போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story