முறையற்ற உறவால் பிறந்து அனாதையாக இறந்த குழந்தை


முறையற்ற உறவால் பிறந்து அனாதையாக இறந்த குழந்தை
x
தினத்தந்தி 17 Aug 2018 10:51 PM GMT (Updated: 17 Aug 2018 10:51 PM GMT)

திருமங்கலம் அருகே முறையற்ற உறவால் பிறந்து குழந்தை அனாதையாக இறந்தது.

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே உள்ள தங்களாச்சேரியைச் சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது32). இவர் திருமங்கலத்தில் தையல் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி தையல் பயிற்சி பெற்று வந்தார். இவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி முத்துப்பாண்டி கர்ப்பமாக்கி விட்டாராம்.

இந்நிலையில் மாணவிக்கு திருமங்கலம் பஸ்நிலையம் எதிரே உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் முறையற்ற உறவால் பிறந்த குழந்தை வேண்டாம் எனக் கூறி மாணவி மற்றும் அவருடைய பெற்றோர்கள் சென்று விட்டனராம். இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அனாதையாக பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து அரசு மருத்துவமனை சார்பில் குழந்தையின் இறப்பை பதிவு செய்ய குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கேட்கப்பட்டது. அப்போது குழந்தை முறையற்ற உறவால் பிறந்தது தெரியவந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனை சார்பாக தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவங்கள் அனைத்தும் திருமங்கலத்தில் நடைபெற்றதால் வழக்கு திருமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து திருமங்கலம் டவுன் போலீசார் திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை விற்பனை செய்யப்பட்டதா? என்றும் மாணவியை ஏமாற்றிய முத்துபாண்டி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story