கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் தீவு போல் காட்சி அளிக்கும் கிராமங்கள்


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் தீவு போல் காட்சி அளிக்கும் கிராமங்கள்
x
தினத்தந்தி 18 Aug 2018 11:00 PM GMT (Updated: 18 Aug 2018 7:02 PM GMT)

கொள்ளிடம் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் கிராமங்கள் தீவு போல காட்சி அளிக்கின்றன. அங்கு வசித்து வந்த பொதுமக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

கொள்ளிடம்,

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் பாயும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களை அதிகாரிகள் இரவு, பகலாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வெள்ளமணல், அளக்குடி, முதலைமேடு திட்டு, வாடி, நாதல்படுகை ஆகிய கிராமங்களுக்குள் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த கிராமங்கள் தீவு போல காட்சி அளிக்கின்றன.

கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விட்டதால் பொதுமக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்து அந்த கிராமங்களில் வசித்து வந்த 700 குடும்பங்களை சேர்ந்தவர்கள் 10 பைபர் படகுகள் மூலம் நேற்று வெளியேற்றப்பட்டனர்.

கிராம மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்கும் பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொள்ளிடம் ஆறு கரைபுரண்டோடுவதால் கொள்ளிடம் பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் வட்டார வளர்ச்சி அதிகாரி, தாசில்தார் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது 3 லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக உயர வாய்ப்பு உள்ளது. வெள்ளம் புகுந்த கிராமங்களை சேர்ந்த 1,115 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு கீழவாடி, பாலுரான்படுகை, கொன்னகாட்டுப்படுகை, துளசேந்திரபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பாரதி எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், ஒன்றிய ஆணையர் அன்பரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

கொள்ளிடம் ஆற்று வெள்ளம் புகுந்ததால் கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த காய்கறி செடிகளும், குறுவை நெல் பயிரும் மூழ்கி விட்டன. வயல் வெளியில் இருந்த மின்மோட்டார்கள், ஆயில் என்ஜின்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்து உள்ளன.

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் கிராமங்கள் முற்றிலும் மூழ்கி விடும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Next Story