உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 19 Aug 2018 10:47 AM GMT (Updated: 19 Aug 2018 10:47 AM GMT)

அவளது மணவாழ்க்கை அமைதியாக சென்று கொண்டிருந்தது. கணவரிடம் சொந்தமாக ஒரு லாரி இருந்தது. அதை அவரே ஓட்டி வருமானம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.

கிராமப் பகுதியில் வீடு இருந்ததால் வீட்டைச் சுற்றிலும் அவள் சிறிய அளவில் காய்கறி பயிரிட்டிருந்தாள். இரண்டு பசுக்களும் வளர்த்து வந்தாள். பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் தினமும் அதிகாலையில் வீட்டிற்கு வந்து பால் கறந்துகொடுத்து விட்டு செல்வான்.

அவளது கணவர் தனிமை விரும்பி. எல்லோரிடமும் மரியாதையை எதிர்பார்ப்பவர். தானுண்டு தன் வேலையுண்டு என்று எப்போதும் அமைதியாக காணப்படுவார். லாரி ஓட்டம் இல்லாமல் இருக்கும்போது மது அருந்திவிட்டு வீட்டிலே தூங்கி விடுவார். அவரால் யாருக்கும், எப்போதும் எந்தவித தொந்தரவும் இருந்ததில்லை. மனைவியையும் அவர் ஒருபோதும் மரியாதைக் குறைவாக நடத்தியதில்லை.

எப்போதும் மது அருந்தினால் அமைதியாக வீட்டிற்கு வரும் அவர் அன்று ஆவேசமாக வீட்டிற்குள் வந்தார். வந்த வேகத்திலே, ‘உனக்கு நான் என்ன குறை வைத்தேன்?’ என்று மனைவியை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினார். அவள் சுதாரிப்பதற்குள் பலத்த அடி விழுந்தது. அதோடு கேவலமாக திட்டவும் செய்தார். எப்போதும் சாந்தமாக காட்சியளிக்கிறவர், முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் அக்கம்பக்கத்தினர் எல்லாம் அங்கே கூடிவிட்டார்கள். ஒருவழியாக அவளை பாதுகாத்து, அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள். கணவர் ஏன் தாக்கினார்? என்று அவளுக்கு தெரியவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து அவளால் மீளமுடியவில்லை.

அவள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டாள். இரண்டு, மூன்று நாட்கள் தங்கி யிருந்து சிகிச்சை பெறும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். மறுநாள் படுகாயத்தோடு கணவரை தூக்கிவந்து, அதே மருத்துவமனையில் சேர்த்தார்கள். கணவருக்கு தலையில் பலத்த காயமும், முதுகுத்தண்டில் பலமான அடியும்பட்டிருந்தது. அவர் திடீரென்று வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். யாரோ பார்த்து, படுகாயத்தோடு அவரது உயிரை காப்பாற்றியிருக்கிறார்கள்.

மனைவியை அவர் ஏன் கண்மூடித்தனமாக தாக்கினார் என்பதற்கும், அவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கும் விடை இதுதான்!

அவர்களது வீட்டிற்கு பால் கறப்பதற்கு வந்த இளைஞருக்கும், பக்கத்து ஊரில் உள்ள லாரி டிரைவர் ஒருவரின் மனைவிக்கும் ரகசிய உறவு இருந்து வந்திருக்கிறது. அந்த லாரி டிரைவருக்கும்- இவருக்கும் ஒரே பெயர். இவர் மது அருந்த சென்றிருந்த பாரில் நாலைந்து பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த பெயரை குறிப்பிட்டு, ‘லாரி ஓட்டும் அவரது மனைவிக்கும், பால் கறக்கும் இளை ஞருக்கும் மாதக் கணக்கில் ரகசிய தொடர்பு இருக்கிறது. அந்த அப்பாவி கணவருக்கு இதுவரை தெரியவில்லை’ என்று கண்டபடி பேசியிருக்கிறார்கள்.

பெயர் ஒரே மாதிரி இருந்ததாலும், அதே இளைஞனே தன் வீட்டிற்கு வந்து பால் கறப்பதாலும், ‘தனது மனைவிக்கும்- அவளுக்கும்தான் ரகசிய தொடர்பு இருக்கிறது’ என்ற தவறான முடிவுக்கு இவர் வந்து, தனது மனைவியை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். மறுநாள் சம்பந்தப்பட்ட இளைஞனிடமே போய் விசாரித்திருக்கிறார். அவர் தனது உண்மையான ‘காதலி’யின் பெயரை சொன்னதும், தவறு செய்துவிட்டோமே என்று நினைத்து, குற்ற உணர்வில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

மனைவி இரண்டொரு நாளில் வீடு திரும்பிவிட்டாள். கணவர் முதுகுத்தண்டு பாதிப்பால் படு்த்தபடுக்கையாகி விட்டார்.

தீர விசாரிக்காமல், தவறான முடிவு எடுத்ததால் ஏற்பட்ட விபரீத விளைவுகளை பார்த்தீர்களா?

- உஷாரு வரும். 

Next Story