தாய் வீட்டை விட்டு வெளியேறியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


தாய் வீட்டை விட்டு வெளியேறியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Aug 2018 10:45 PM GMT (Updated: 21 Aug 2018 7:03 PM GMT)

தாய் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவிக நகர்,

சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகர் முதல் தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 25). நேற்று முன்தினம் மதியம் அப்பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டர் அப்பு என்பவர் அறிவழகன் வீட்டுக்கு வந்தார்.

நீண்ட நேரம் தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியே எட்டி பார்த்தார். அப்போது அறிவழகன் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பேசின்பிரிட்ஜ் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அறிவழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அறிவழகன் வேலைக்கு ஏதும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். குடிப்பழக்கம் உடைய அவர் தனது தாய் பிரபலாதேவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டு நச்சரித்து வந்தார்.

இதனால் தாய்க்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மகனின் தொல்லை தாங்க முடியாத பிரபலாதேவி கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி எங்கேயோ சென்றுவிட்டார் என தெரியவந்தது.

தாய் வீட்டை விட்டு வெளியேறியதால் அறிவழகன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என அவரது அண்ணன் அருண் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தனது மகன் உயிரை மாய்த்தது கூட பிரபலாதேவிக்கு தெரியாது. மாயமான தனது தாய் பிரபலாதேவியை கண்டுபிடித்து தரும்படி அருண் போலீசில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story