2-வது நாளாக ஊருக்குள் சுற்றித்திரியும் காட்டெருமை


2-வது நாளாக ஊருக்குள் சுற்றித்திரியும் காட்டெருமை
x
தினத்தந்தி 21 Aug 2018 9:45 PM GMT (Updated: 21 Aug 2018 9:22 PM GMT)

சேலம் கன்னங்குறிச்சியில் நேற்று 2-வது நாளாக ஊருக்குள் காட்டெருமை சுற்றித்திரிந்தது.

கன்னங்குறிச்சி,

சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரி பகுதியில் நேற்று முன்தினம் ஏற்காடு மலையில் இருந்து வந்த காட்டெருமை ஒன்று சுற்றித்திரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டெருமை மூக்கனேரி அருகில் உள்ள ராமநாதபுரம் ஊருக்குள் புகுந்து அங்கும், இங்குமாக ஓடியது. இதை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

இதையடுத்து காட்டெருமை விவசாயி ஒருவரது தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்து செல்ல மறுத்த காட்டெருமை இரவில் அங்கேயே படுத்து கொண்டது. 2-வது நாளான நேற்று காலை காட்டெருமை மோட்டாங்குறிச்சி பகுதியில் சுற்றித்திரிந்தது. பின்னர் அங்குள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றது.

தொடர்ந்து ஊருக்குள் புகாமல் இருக்க பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் வருகின்றனர். மாலையில் காட்டெருமை மூக்கனேரி பகுதிக்கு மீண்டும் சென்று அங்கேயே சுற்றி வருகிறது. அதை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story