காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலி


காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 25 Aug 2018 10:29 PM GMT (Updated: 25 Aug 2018 10:29 PM GMT)

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வாலாஜாபாத்,

வேலூர் மாவட்டம் சோழம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபதி(வயது 49). முன்னாள் ராணுவ வீரரான இவர், தற்போது சென்னை விமான நிலையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னை பரங்கிமலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவருடைய மனைவி கமலா(46). உமாபதி தனது மனைவியுடன் தனது சொந்த ஊரான சோழம்பூருக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே வந்தபோது வேலூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த அரசு பஸ், இவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது கமலாவின் தலை மீது அரசு பஸ் சக்கரம் ஏறி இறங்கியதால், அவர் தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், படுகாயம் அடைந்த உமாபதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான கமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஜே.ஜே.நகரில் வசித்து வருபவர் சிவமணி. இவருடைய மகன் பரத்(24). ஆட்டோ டிரைவரான இவர், சென்னையில் நடந்த தனது அண்ணனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று அதிகாலையில் தாய் லட்சுமி(52)யை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

சோழவரம் அடுத்த செம்புலிவரம் கிராமம் அருகே சென்றபோது சாலையோரம் நிறுத்தி இருந்த லாரி மீது ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த தாய்-மகன் இருவரையும் சோழவரம் போலீசார் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரத் பரிதாபமாக உயிரிழந்தார். லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த நெல்வாய் சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவர், திருநின்றவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். திருவள்ளூரை அடுத்த தொழுவூர் சாலையில் சென்றபோது எதிரே திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் நிலைதடுமாறி மணிகண்டனும், மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வேப்பம்பட்டு பெருமாள்நகரைச் சேர்ந்த அசோக்குமார்(23) ஆகிய 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த அசோக்குமார், திருவள்ளூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story