திருச்சி விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் 2 பயணிகளிடம் விசாரணை


திருச்சி விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் 2 பயணிகளிடம் விசாரணை
x
தினத்தந்தி 27 Aug 2018 4:15 AM IST (Updated: 27 Aug 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமானநிலையத்தில் ரூ.37 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பயணிகளிடம் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டு,

திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் செல்ல இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகள் விமானநிலையத்தின் உள்பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது 2 பயணிகளின் நடவடிக்கையில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து அந்த 2 பயணிகளையும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது சுல்தான், தாஜூதீன் என தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த உடைமைகளை சோதனையிட்டனர். அதில் வெளிநாட்டு கரன்சிகள் இந்திய மதிப்பில் ரூ. 37 லட்சத்திற்கு இருந்தது. இது குறித்து 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் பணத்திற்கு முறையான பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து ரூ.37 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமானநிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் மற்றும் பொருட்களை கடத்தி வந்த பயணிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேரும் கைதாகினர். இருப்பினும் திருச்சி விமானநிலையத்தில் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதும், பயணிகள் சிக்குவதும் தொடர்ந்து வருகிறது.

Next Story