வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 29 Aug 2018 11:00 PM GMT (Updated: 29 Aug 2018 6:35 PM GMT)

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். வருகிற 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) பெரிய தேர்பவனி நடைபெற உள்ளது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான ஆன்மிக சுற்றுலா தலமாகும். கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இங்கு அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் நம்பிக்கை யுடன் வழிபடுகிறார்கள்.

கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய “பசிலிக்கா” என்ற அந்தஸ்து, வேளாங்கண்ணி பேராலயத்துக்கு உண்டு. இந்தியாவில் பிரம்மாண்டமான கட்டிட அமைப்புடன் கூடிய 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயமும் ஒன்றாகும். புயலில் சிக்கிய போர்த்துக்கீசியர்களை வேளாங்கண்ணியில் பத்திரமாக கரைசேர்த்த அன்னை மரியாவிற்கு நன்றி கடனாக கட்டப்பட்ட ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் வங்க கடல் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும்.

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்தநாள் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அன்னை ஆரோக்கிய மாதாவின் தேர் பவனி நடைபெற்றது. அப்போது பெண்கள் தேரை தூக்கி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதனைத்தொடர்ந்து மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

கொடி ஊர்வலம் தேவாலய வளாகம், கடற்கரை சாலை, ஆரிய நாட்டு தெரு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் உள்ள 90 அடி உயர கொடி கம்பத்தில் 6.40 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்தார்.

கொடியேற்றத்தின்போது பேராலயத்தின் அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஒளிர விடப்பட்டன. அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “மரியே வாழ்க” என சரண கோஷம் எழுப்பினர். கொடியேற்றத்தையொட்டி வாணவேடிக்கையும் நடைபெற்றது. கொடியேற்றத்தை காண இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனர். இதனால் பேராலய வளாகம், கடற்கரை என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அலை கடலென திரண்டிருந்தனர்.

முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது:-

வேளாங்கண்ணி அன்னையின் ஆண்டு திருவிழா வருகிற 8-ந் தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டு திருவிழாவை காண தமிழ்நாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இனம், மொழி பாகுபாடின்றி அன்னையின் பக்தர்களாக ஒன்று கூடி அனைவரும் திருப்பயணிகளாக வேளாங்கண்ணிக்கு வருகின்றனர்.

இந்த திருப்பயணத்தின் நோக்கம், நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் உலகிலே எந்த மனிதரும் நிலையாக வாழ்வது இல்லை. நிலையற்ற வாழ்விலே நிலையான ஆண்டவனை தேடிக்கொள்வதுதான் திருப்பயணத்தின் நோக்கம் ஆகும். திருப்பயணத்தில் இதய தூய்மையோடு வர வேண்டும். திருவிழாவிற்கு வருகின்ற அனைவருக்கும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இவை அனைத்தும் முறையாக பயன்பெற்று அன்னையின்ஆசி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொடியேற்று விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், பேராலய அதிபர் பிரபாகர், உதவி அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்குத்தந்தையர்கள் ஆண்டோ ஜேசுராஜ், டேவிட் தன்ராஜ், வேளாங்கண்ணி முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் தாமஸ் ஆல்வா எடிசன், ஜூலியட் அற்புத ராஜ், கிங்ஸ்லி ஜெரால்டு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் 7-ந்தேதி (வெள்ளிக் கிழமை) இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் 8-ந்தேதி (சனிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழா நாட்களில் பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் கீழ்க்கோவில்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகின்றன. அதேபோல சிலுவை பாதை வழிபாடு, செப மாலை, நவநாள் செபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

Next Story