ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு கர்நாடக, கேரள வியாபாரிகள் வருகையால் மாடுகள் விற்பனை அதிகரிப்பு


ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு கர்நாடக, கேரள வியாபாரிகள் வருகையால் மாடுகள் விற்பனை அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2018 11:00 PM GMT (Updated: 30 Aug 2018 9:30 PM GMT)

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு கர்நாடக மற்றும் கேரள வியாபாரிகள் வருகையால் மாடுகள் விற்பனை அதிகரித்து உள்ளது.

ஈரோடு, 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 200 வளர்ப்பு கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவைகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று வழக்கமான சந்தை கூடியது. இதற்கு ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து 300 பசு மாடுகள், 250 எருமை மாடுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.18 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.34 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.16 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.32 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் மாடுகளை விலைபேசி பிடித்து வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.

இதுகுறித்து சந்தை மேலாளர் முருகன் கூறும்போது, ‘கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் பெய்த தொடர்மழை காரணமாக கடந்த 3 வாரங்களாக அந்த மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. இதனால் மாடுகள் விற்பனை 65 சதவீதம் முதல் 70 சதவீதமாக இருந்தது. தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை நின்றுவிட்டதால் அந்த மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வரத்தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக இன்று (நேற்று) 90 சதவீத மாடுகள் விற்பனையானது’ என்றார்.

Next Story