சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கி சேவை நாளை தொடக்கம்


சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கி சேவை நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 30 Aug 2018 10:15 PM GMT (Updated: 30 Aug 2018 10:01 PM GMT)

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கி சேவை நாளை தொடங்கப்பட உள்ளது என்று முதுநிலை கண்காணிப்பாளர் முஜிப்பாஷா கூறினார்.

சேலம்,

தபால் துறை சார்பில் ‘இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி‘ என்ற புதிய சேவையை பிரதமர் நரேந்திரமோடி நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் 650 கிளைகளில் தொடங்கி வைக்கிறார். சேலம் கிழக்கு கோட்டத்தில், சேலம் தலைமை தபால் அலுவலகம், கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, பூலாவாரி மற்றும் புத்தூர் ஆகிய 5 தபால் நிலையங்களில் முதல் கட்டமாக வங்கி சேவை தொடங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா நாளை மதியம் 2 மணிக்கு சேலம் ஜெய்ராம் கல்லூரியில் நடக்கிறது.

இதில் மத்திய கலால் துறை துணை ஆணையர் சங்கீதா நேரு, சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சேவையை தொடங்கி வைக்கின்றனர். சேலம் கிழக்கு கோட்டத்திற்கு 2,700 புதிய கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 1,250 கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது. கணக்கு தொடங்க முன் பணம் செலுத்த தேவையில்லை என்பதால் பொது மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது.

அதே போன்று தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வருகிற 6-ந்தேதி ‘என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்‘ என்ற தலைப்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

மேலும் அகில இந்திய அளவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.25 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை அஸ்தம்பட்டி தபால் அலுவலகத்தில் தபால் தலை கண்காட்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story