தமிழக அரசியலில் திரையுலகை சேர்ந்தவர்கள் கால் ஊன்ற முடியாது நாஞ்சில் சம்பத் பேட்டி


தமிழக அரசியலில் திரையுலகை சேர்ந்தவர்கள் கால் ஊன்ற முடியாது நாஞ்சில் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 31 Aug 2018 11:12 PM GMT (Updated: 31 Aug 2018 11:12 PM GMT)

திரை உலகினர் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது, தமிழக அரசியலில் திரையுலகை சேர்ந்தவர்கள் கால் ஊன்ற முடியாது என நாஞ்சில் சம்பத் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த நாஞ்சில் சம்பத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் அணியில் நான் இணைய போவதாக வந்துள்ள தகவல் பொய்யானது. அரசியலை விட்டு வெகுதூரம் வந்து விட்டேன். இனி எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் தான் தற்காப்பு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

காவிரி தண்ணீரை கடலில் கொண்டு விட்டது தமிழக அரசின் நிர்வாகம் தான். இதனால் காவிரி நீர், டெல்டா மாவட்டத்திற்கு கிடைக்காமல் வறண்டு காய்ந்து கிடக்கிறது. இனியாவது தமிழக முதல்-அமைச்சர் தண்ணீரை பயன்படுத்துவதில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அழகிரி தி.மு.க.வின் தென் மண்டல செயலாளராக பணியாற்றி உள்ளார். தொண்டர்களுடன் நெருக்கமாக இருந்து பெயர் சொல்லி அழைக்க கூடியவராக இருந்துள்ளார். எனவே கட்சியில் அழகிரியை இணைத்தால் தி.மு.க. வலுப்பெறும் அந்த முடிவு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் தான் இருக்கிறது.

தமிழகத்தில் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை ஊழல் புதைந்து கிடக்கிறது. இதனை தடுத்தாக வேண்டும் என்பதை விட இந்த அநியாயத்திற்கு முடிவு கட்ட வேண்டும். அதை யார் செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விஷால் புதிய இயக்கம் தொடங்கியுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நடிகர்கள் கட்சி தொடங்கியிருப்பது இடைத்தேர்தலில் வெட்ட வெளிச்சமாகி விடும். திரையுலகத்தினர் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. திரையுலகை சேர்ந்தவர்கள், தமிழக அரசியலில் காலூன்ற முடியாது. அப்படி கனவு காண்பவர்களுக்கு என்னுடைய அனுதாபங்கள் என்றார்.

நடிகர்கள் கட்சி தொடங்குவதால் திராவிட கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், காடு, நிலம், காற்று, நீர் இருக்கும் வரை திராவிடம் இருக்கும். வேறு எந்த இயக்கத்திற்கும் இங்கு இடம் இல்லை என்றார்.

Next Story