அனுமதியின்றி இயங்கி வந்த குழந்தைகள் காப்பகம் மூடல் அதிகாரிகள் நடவடிக்கை


அனுமதியின்றி இயங்கி வந்த குழந்தைகள் காப்பகம் மூடல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Sep 2018 11:00 PM GMT (Updated: 1 Sep 2018 7:26 PM GMT)

கீரனூர் அருகே அனுமதியின்றி இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்தை மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள தவளைமேடு என்ற ஊரில் தி ஆப்காட் ட்ரஸ்ட் சாராள் என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இதில் 6 சிறுவர்கள், 3 சிறுமிகள் உள்ளனர். இதன் நிர்வாகிகளாக ரவீந்திரன் (வயது 39). அவரது மனைவி வளர்மதி (36) ஆகியோர் உள்ளனர். இதையடுத்து இந்த காப்பகம் அனுமதியின்றி இயங்கி வருவதாக, மத்திய சமூக பாதுகாப்பு மற்றும் குழந்தை நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று மத்திய சமூக பாதுகாப்பு மற்றும் குழந்தை நலத்துறை அதிகாரி ஆனந்த் தலைமையில் 7 அதிகாரிகள் கொண்ட குழுவினர் காப்பகத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த காப்பகம் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காப்பகத்தை அதிகாரிகள் இழுத்து மூடினர். பின்னர் அந்த காப்பகத்தின் நிர்வாகி ரவீந்திரனை பிடித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் அதி காரிகள் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் ரவீந்திரனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரவீந்திரனும், அவரது மனைவி வளர்மதியும் ஏற்கனவே புதுக்கோட்டையில் இதேபெயரில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்ததும், குழந்தைகள் காப்பகம் நடத்தி வருவதற்கு, அரசு அனுமதி முடிந்து விட்டதால், தவளை மேடு என்ற ஊரில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி அனுமதியின்றி காப்பகம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே தகவல் அறிந்த ரவீந்திரன் மனைவி வளர்மதி, காப்பகத்தில் இருந்த குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். கீரனூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகத்தை அதிகாரிகள் மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story