சென்னை, தமிழ் மொழி, கலாசாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் ஓட்டம்


சென்னை, தமிழ் மொழி, கலாசாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 2 Sep 2018 11:15 PM GMT (Updated: 2 Sep 2018 5:29 PM GMT)

தமிழ் மொழி, கலாசாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சென்னை,

தமிழ் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அடிப்படை வசதி இல்லாத கிராமங்களில் கல்வி, சுகாதாரம் சார்ந்து மேம்படுத்துவதற்காகவும் ‘தமிழ்மாரத்தான்’ என்ற அமைப்பு சார்பில் நேற்று சென்னை பெசன்ட்நகர் ‘எலியாட்ஸ்’ கடற்கரையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 3 கி.மீ., 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. ஆகிய 3 பிரிவுகளில் மாரத்தான் ஓட்டம் நடந்தது.

இதற்கான ஓட்டத்தை ‘தமிழ்மாரத்தான்’ ஏற்பாட்டாளர் ஆர்.ஹேமந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள், குடும்ப தலைவிகள், சமூக ஆர்வலர்கள், தமிழ் மொழி பற்றாளர்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று ஓடினர்.

3 கி.மீ., 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. தூர மாரத்தான் ஓட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாரத்தான் ஓட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. மாரத்தானில் பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் பதிவு செய்த தொகை கிராமங்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக மாரத்தான் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதே முழக்கத்தை முன்னிறுத்தி சென்னையைப்போன்று அமெரிக்காவில் நியூஜெர்சியிலும், கனடாவில் டொரன்டோவிலும், இங்கிலாந்தில் லண்டனிலும், மலேசியாவில் கோலாலம்பூரிலும் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. ஒரே நேரத்தில் நடந்த இந்த மாரத்தான் ஓட்டம் இந்தியர்களின் உலக சாதனையில் பதிவாகியுள்ளதாக ‘தமிழ்மாரத்தான்’ ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


Next Story