கரூர் மாவட்ட மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து ஆய்வு கூட்டம்


கரூர் மாவட்ட மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 3 Sep 2018 11:00 PM GMT (Updated: 3 Sep 2018 9:14 PM GMT)

கரூர் மாவட்ட மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் முழுவதும் மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம், கரூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, குடிநீர் வினியோகத்தை தொய்வில்லாமல் மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சி துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர். கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியபோது கூறியதாவது:-

கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் சீராக குடிநீர் வழங்குவதற்காக 14 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. குழாய் உடைப்பினால் நீர் வீணாகி செல்வது உள்ளிட்ட குறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஒரு பகுதிக்கு குடிநீர் வழங்கும்போது அந்த கிராமத்தில் எத்தனை நபர்கள் வசிக்கிறார்கள், குடிநீர் தேவையின் அளவு எவ்வளவு? அதற்கு எவ்வளவு குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்த வேண்டும் என்பதை உரிய தொழில்நுட்பம் கொண்டு ஆலோசனை செய்து பணிகளை செயல்படுத்த வேண்டும். புவியியல் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளையும் கணக்கெடுத்து நிலத்தடி நீர் அதிகமுள்ள பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது:-

கடந்த ஆண்டு மட்டும் ரூ.13 கோடி மதிப்பிற்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுக்குடிநீர் திட்டங்களில் 434 அனுமதியற்ற இணைப்புகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 79 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இணைப்புகளையும் துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரவக்குறிச்சி மற்றும் கடவூர் பகுதிகளுக்கு தனித்தனியே கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே குடிநீர் வழங்கும் பணிகளில் உள்ள குறைபாடுகளை நீக்க குழு ஒன்றை அமைத்து, குடிநீர் வழங்கும் பாதைகளை வரைபடம் மூலம் கணக்கிட்டு எந்த கிராமங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய பொறியியல் இயக்குனர் (சென்னை) மதியழகன், நிர்வாகப்பொறியாளர்கள் முத்துமாணிக்கம் (கிராம குடிநீர் திட்டம்), சீனிவாசன் (நகர குடிநீர் திட்டம்), பிரபுராம் (திண்டுக்கல்), பரூக் (திருச்சி), உதவி நிர்வாகப்பொறியாளர்கள் அசோக்செல்வராஜ், ரவிச்சந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன், குளித்தலை நகராட்சி ஆணையர் சையது முஸ்தபா கமாலுதீன், கரூர் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story