குடிநீர் தட்டுப்பாடு: மீஞ்சூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை


குடிநீர் தட்டுப்பாடு: மீஞ்சூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை
x
தினத்தந்தி 4 Sep 2018 10:30 PM GMT (Updated: 4 Sep 2018 6:39 PM GMT)

மீஞ்சூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.

பொன்னேரி,

மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதி 1, 2, 3-வது தெருக்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் எப்போதாவது வரும் குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவர்கள் தவித்து வருகிறார்கள். இதையடுத்து டிராக்டர் மூலம் விற்கப்படும் தண்ணீரை மட்டுமே நம்பி உள்ளனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.6 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, “குடிநீர் தட்டுப்பாடு குறித்து மீஞ்சூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கூடுதல் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதேபோல் அந்த பகுதி யில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பால் அங்கேயே தேங்கி கிடக்கிறது. இதனால் தெருக்கள் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Next Story