பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது முற்றிலும் நிறுத்தம்


பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது முற்றிலும் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Sep 2018 10:45 PM GMT (Updated: 4 Sep 2018 7:14 PM GMT)

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.

ஊத்துக்கோட்டை,

பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.

புழல் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் வட சென்னையிலும், செம்பரம்பாக்கம் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் தென் மற்றும் மத்திய சென்னை பகுதியிலும் வினியோகிக்கப்படுகிறது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஜனவரி மாதம் 2-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது.

கண்டலேறு அணையில் 68 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். கோடை வெயில் காரணமாக கண்டலேறு அணை வறண்டதால் மார்ச் மாதம் 26-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஜனவரி 2-ந்தேதி முதல் மார்ச் மாதம் 26-ந்ே-தி வரை 2.280 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது.

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் காரணமாக கடந்த மே மாதம் 21-ந் தேதி லிங்க் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடியாகும். நேற்று முன்தினம் காலை வெறும் 12 மில்லியன் கனஅடி மட்டும்தான் தண்ணீர் இருப்பு இருந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் திறக்கப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டது.

இதன் மூலம் பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது முற்றிலும் நிறுத்தப்பட்டுளது.

Next Story