பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Sep 2018 10:30 PM GMT (Updated: 4 Sep 2018 8:43 PM GMT)

பெண்களை கேலி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் “ஹெல்மெட்” அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்தவேதவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, பள்ளி தலைமை ஆசிரியை இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் கலந்து கொண்டு தனது அலுவலக முகவரி எழுதப்பட்ட தபால் அட்டைகளை மாணவிகளுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் என்னைப்போல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவோ அல்லது கலெக்டராகவோ வர வேண்டும். பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவது பெருமை அடைய செய்கிறது. பெண்கள் முன்னேற்றம் அடைய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்கு காவல் துறையும் உறுதுணையாக இருக்கும். பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவிகள் தங்களிடம் வழங்கப்பட்டுள்ள தபால் அட்டைகளில் கேலி செய்பவர்கள் தொடர்பாக புகார் எழுதி எனக்கு அனுப்பலாம். அந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து லெட்சுமாங்குடி நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார்.

Next Story