துணி மூட்டைபோல் கடத்தி விற்பனை: குட்கா கடத்திய அண்ணன்-தம்பி கைது


துணி மூட்டைபோல் கடத்தி விற்பனை: குட்கா கடத்திய அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 5 Sep 2018 11:15 PM GMT (Updated: 5 Sep 2018 7:02 PM GMT)

துணி மூட்டை போல் குட்கா போதைப்பொருளை கடத்திச்சென்று விற்பனை செய்ததாக சென்னையில் அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்மீரா மற்றும் தலைமை காவலர் ஆகியோர் நேற்று காலை செல்லப்பா தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது போலீசாரிடம் அங்குள்ள ஒரு வீட்டில் துணி மூட்டைகள் போல் குட்கா பொருட்களை கடத்தி வருவதும், அவற்றை ஓட்டேரி சுற்றியுள்ள கடைகளுக்கு விற்பனைக்கு சப்ளை செய்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் குறிப்பிட்ட வீட்டில் சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மூட்டை மூட்டையாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா மற்றும் ஹன்ஸ் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது அங்கு இருந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் ஓட்டேரி கண்ணப்பா தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது59), அவரது தம்பி சுப்பையா(54) என்பதும் இவர்கள் ஆந்திராவில் இருந்து துணி மூட்டைகள் போல் அடுக்கி குட்கா பொருட்களை கடத்தி வந்து இங்கு அதேபோன்று துணிகள் போல குட்காவை கடத்தி சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

போலீசார் அந்த வீட்டில் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர் முகம்மது நாசர் 2 பேரையும் கைது செய்தார். பின்னர் அண்ணன்-தம்பி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story