குட்கா ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் விஜய பாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - பாலகிருஷ்ணன் பேட்டி


குட்கா ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் விஜய பாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 5 Sep 2018 11:30 PM GMT (Updated: 5 Sep 2018 7:21 PM GMT)

குட்கா ஊழல் புகாரில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

கோவை,

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி, கோவை சிறை வளாகத்தில் உள்ள அவர் இழுத்த செக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கினை பொதுமக்கள் பார்வைக்கு பூங்காவில் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரலாற்றில் முதல் முறையாக தமிழக டி.ஜி.பி வீட்டில் சோதனை நடந்து வருகிறது. மேலும் பல காவல் துறை அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஓய்வு பெற்ற, குற்றச்சாட்டிற்குள்ளான ஒருவருக்கு மீண்டும், மீண்டும் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏன் கொடுக்கப்படுகின்றது? என்று தெரியவில்லை.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எத்தனை முறை சோதனை நடத்தப்படும் என்று தெரியவில்லை, எவ்வளவு ஆதாரங்கள் வெளியாகும் என்றும் தெரியவில்லை. இவ்வளவு நடந்தும் தமிழக முதல்–அமைச்சர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

ஊழல் குற்றசாட்டுகளில் தொடர்ந்து சிக்கி வரும் அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழக டி.ஜி.பி.யும் பதவி விலக வேண்டும். தமிழக முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோர் மீதும் ஊழல் வழக்குகள் நடப்பதால் மொத்தமாக இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

சி.பி.ஐ. சோதனை நடத்தி என்ன செய்ய போகின்றனர் என தெரியவில்லை. ஏற்கனவே பல முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் பதுக்க வேண்டிய ஆதாரங்கள் பதுக்கப்பட்டு இருக்கும். ஏற்கனவே நடைபெற்ற சோதனை முடிவுகள் என்ன ஆனது என்று தெரியவில்லை. மக்கள் போராட்டங்கள் மூலமே இந்த ஆட்சியை அகற்ற முடியும். அவர்களாக போகவே மாட்டார்கள்.

பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருந்தால் போதும், பதவியில் தொடரலாம் என்ற நம்பிக்கையில் ஆளும் கட்சியினர் நினைக்கின்றனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்தால் அது நிச்சயம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

அ.தி.மு.க. அரசு ஏற்கனவே மோடி அரசுடன் ஒத்துப்போகும் நிலையில் தற்போது மீண்டும் கூடுதலாக அ.தி.மு.க.வை நிர்பந்தப்படுத்தவும் இந்த சோதனை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அரசியல் தேவையை பூர்த்தி செய்ய இந்த சோதனையை பா.ஜனதா அரசு நடத்தினால் பிரதமர் மோடிதான் குற்றவாளியாக இருக்க முடியும். ஹைட்ரோ கார்பன் உள்பட கனிமவளங்களை எடுக்க மத்திய அரசு விதிகளை தளர்த்தி இருக்கின்றது. இயற்கை வளங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையினை மத்திய அரசு மேற்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story