நள்ளிரவில் பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு ரவுடி படுகொலை


நள்ளிரவில் பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு ரவுடி படுகொலை
x
தினத்தந்தி 5 Sep 2018 9:30 PM GMT (Updated: 5 Sep 2018 7:31 PM GMT)

பழனியில் நள்ளிரவில், தலையில் கல்லைப்போட்டு ரவுடி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பழனி, 


பழனி தெரசம்மாள் காலனியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகன் அய்யாவு (வயது 34). இவருக்கு திருமணமாகி 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அய்யாவு பழனி அடிவாரம் பகுதியில் தள்ளுவண்டியில் உணவு பொருட்களை விற்பனை செய்து வந்தார். மேலும் இவர் திருட்டு, வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் பாலசமுத்திரம் மதுபான கடையில் நடந்த ஒரு கொலையிலும், அடிவாரம் பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கு மற்றும் பெரியாவுடையார் கோவில் அருகே நடந்த ஒரு கொலை வழக்கிலும் இவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து ரவுடிகள் பட்டியலில் போலீசார் இவரை சேர்த்தனர். மேலும் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரசம்மாள் காலனி பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான ஆறுமுகம் (41) என்பவரிடம் அய்யாவு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் அய்யாவு பழனி-உடுமலை சாலையில் தனியார் தியேட்டர் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆறுமுகம் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர் வந்தனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து அய்யாவுவிடம் தகராறில் ஈடுபட்டனர்.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அய்யாவுவை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் சாலையோரத்தில் கிடந்த கல்லை எடுத்து அய்யாவு தலையில் போட்டனர். இதில் படுகாயமடைந்த அய்யாவு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி நகர் போலீசார் விரைந்து வந்தனா. பின்னர் அய்யாவு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஆறுமுகம் உள்பட 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.இந்தநிலையில் வெளியூருக்கு தப்பி செல்வதற்காக பழனி பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஆறுமுகத்தை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நண்பர்களுடன் சேர்ந்து அய்யாவு தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நண்பர்களான தெரசம்மாள் காலனியை சேர்ந்த சூரியகுமார் (24), எழில்புத்தன் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராம்குமார் (26) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story