சேலத்தில் தொழிலாளி எரித்து கொலை


சேலத்தில் தொழிலாளி எரித்து கொலை
x
தினத்தந்தி 5 Sep 2018 9:45 PM GMT (Updated: 5 Sep 2018 8:50 PM GMT)

சேலத்தில் தொழிலாளி எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரமங்கலம், 


சேலம், ஜாகீர் சின்னஅம்மாபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 40), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் உடல் கருகிய நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சீனிவாசன் போலீசில் கூறியதாவது:-

நான் எனது பக்கத்து வீட்டை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவிக்கு கடன் வாங்கி கொடுத்து இருந்தேன். அந்த பணத்தை திரும்ப வாங்குவதற்காக நான் அவரது வீட்டுக்கு சென்று கேட்டேன். அங்கு சுரேசும், அவரது மாமனார் மாதையனும் இருந்தார்கள். எனக்கு தர வேண்டிய பணத்தை தர மறுத்து என்னிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து என் மீது ஊற்றி தீ வைத்து விட்டனர். இதில் உடல் கருகிய நான் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இதன் பேரில் சூரமங்கலம் போலீசார் சுரேஷ், மாதையன் ஆகிய 2 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, சீனிவாசனுக்கும், சுரேசின் மனைவிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதையடுத்து மாதையன் தனது மகள் வாழ்க்கை பறி போய் விடும் சூழ்நிலை இருக்கிறதே என்று கவலைப்பட்டு சீனிவாசன் மீது சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். சீனிவாசனை அழைத்து போலீசார் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து சீனிவாசன், சுரேசின் மனைவியுடன் இனிமேல் பழக மாட்டேன் என்று கூறி போலீசாரிடம் எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டது தெரியவந்தது.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story