பரமத்தி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு


பரமத்தி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 5 Sep 2018 10:45 PM GMT (Updated: 5 Sep 2018 10:00 PM GMT)

பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையொட்டி வில்லிபாளையத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு வீடுகளையும், சுங்ககாரம்பட்டி ஊராட்சியில் எர்ணாபுரம், பரமத்தி சாலை முதல் திண்டமங்கலம் வரை ரூ.43.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை மற்றும் சிறு பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிள்ளைக்களத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்ட பணியாளர்களால் அமைக்கப்பட்டு வரும் ரூ. 3.6 லட்சம் செலவிலான 60 நீர்பிடிப்புக்குட்டைகள், ரூ.77 ஆயிரம் மதிப்பீட்டில் வில்லிபாளையம் ஊராட்சியில் தடுப்பணை அமைக்கப்படும் வரும் பணியினையும் பார்வையிட்டார்.

மேலும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளாளன், சுந்தர், ஒன்றிய பொறியாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story