அரசின் சில துறைகளை வடகர்நாடகத்துக்கு இடம் மாற்ற மந்திரிசபை ஒப்புதல்


அரசின் சில துறைகளை வடகர்நாடகத்துக்கு இடம் மாற்ற மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 7 Sep 2018 12:32 AM GMT (Updated: 7 Sep 2018 12:32 AM GMT)

அரசின் சில துறைகளை வடகர்நாடகத்துக்கு இடம் மாற்ற மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ள தாக மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகர்நாடகத்துக்கு அரசின் சில துறைகளை இடம் மாற்றுவது குறித்து ஆலோசிக்க மந்திரிசபை துணை குழு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டடுள்ளது. முதல் கட்டமாக கிருஷ்ணா பாக்ய நீர் கழகம், கர்நாடக நீர்ப்பாசன கழகம், கர்நாடக கரும்பு மேம்பாட்டு இயக்குனரகம், கர்நாடக நகர குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றை வடகர்நாடகத்துக்கு மாற்ற நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

2 தகவல் இயக்குனர்களில் ஒருவரையும், மனித உரிமை ஆணைய 2 உறுப்பினர்களில் ஒருவரையும் வட கர்நாடகத்திற்கு மாற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ராமநகரில் ரூ.40.17 கோடியில் அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும்.ராமநகர், சென்னப ட்டணா ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள 16 கிராமங்களுக்கு ரூ.450 கோடி செலவில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. செல்போன் செயலி மூலம் பயிர்களை ஆய்வு செய்ய ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ரூ.25 கோடி செலவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுரா தாலுகா ஹரதனஹள்ளியில் உண்டு உறைவிட முதல் நிலை கல்லூரி ரூ.15 கோடியில் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார். 

Next Story