சேலம் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் - கலெக்டர் ரோகிணி ஆய்வு


சேலம் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் - கலெக்டர் ரோகிணி ஆய்வு
x
தினத்தந்தி 7 Sep 2018 11:30 PM GMT (Updated: 7 Sep 2018 10:55 PM GMT)

வடகிழக்கு பருவ மழையை யொட்டி சேலம் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம்,

வடகிழக்கு பருவமழையையொட்டி, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்வரத்து கால்வாய்கள், நீர் நிலைகள் ஆகியவற்றை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சூரமங்கலம் மண்டலம் 25-வது வார்டுக்கு உட்பட்ட சின்னேரி வயல்காடு, ஓடைப்பகுதியில் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது.

இதை கலெக்டர் ரோகிணி, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து 24-வது வார்டு கோனேரிபட்டி பகுதியில் உள்ள நீர் வழிப்பாதையை ஆய்வு செய்தார். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதே போன்று 22-வது வார்டு சிவதாபுரம் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்காமல் தடுப்பதற்காக வடிகால் அமைக்கும் பணி மற்றும் தூர் வாரப்பட்டுள்ள கால்வாய்களை பார்வையிட்டார். தொடர்ந்து சேலத்தாம்பட்டி ஏரியை பார்வையிட்டார். அப்போது ஏரியை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து 21-வது வார்டுக்கு உட்பட்ட ராமலிங்க நகர், ரெயில் நகர் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களை பார்வையிட்டார். இதே போன்று ஊத்துமலை, அம்மாள் ஏரி பகுதிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கலெக்டருடன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், சப்-கலெக்டர் வந்தனா கார்க், செயற்பொறியாளர்கள் அசோகன், கலைவாணி, பாஸ்கரன் உள்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story