குமரி கோவில் கொள்ளை வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும்


குமரி கோவில் கொள்ளை வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Sep 2018 12:07 AM GMT (Updated: 8 Sep 2018 12:07 AM GMT)

குமரி மாவட்ட கோவில்களில் நடந்த கொள்ளை வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பூதப்பாண்டி,

நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்து புதிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, நாகர்கோவில் நகருக்கு தற்போது குடிநீர் வழங்கி வரும் முக்கடல் அணையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அணையின் இருப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு சீராக தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகர்கோவில் நகரின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு சார்பில் ரூ.112 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணி முழுமையாக முடிந்த பின்பு, நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

குமரி மாவட்டத்தில் திக்குறிச்சி மகாதேவர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிலைகள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. சிலை திருட்டு சம்பவங்களுக்கும், சிலை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. எனவே, குமரி மாவட்ட கோவில்களில் நடந்த கொள்ளை வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் சிலை கொள்ளை சம்பவங்களுக்கு முழுமையாக துப்பு கிடைக்கும். குட்கா வழக்கு தொடர்பாக மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் புத்தன் அணையை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கிருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின் போது, நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமார், நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் கதிரேசன், கோபால கிருஷ்ணன் மற்றும் பா.ஜனதா பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசு நிதியில் இருந்தும், அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக நாகர்கோவிலில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் நகராட்சி பூங்காவை பார்வையிட்டார்.

அப்போது மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் அங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது பூங்காவுக்கு வந்திருந்த பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்களிடம் பூங்காவில் உள்ள வசதிகள், குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

Next Story