களக்காடு வனப்பகுதியில் காட்டெருமைகளை வேட்டையாடும் செந்நாய்கள் கேமராவில் காட்சிகள் பதிவு


களக்காடு வனப்பகுதியில் காட்டெருமைகளை வேட்டையாடும் செந்நாய்கள்  கேமராவில் காட்சிகள் பதிவு
x
தினத்தந்தி 8 Sep 2018 9:30 PM GMT (Updated: 8 Sep 2018 1:35 PM GMT)

களக்காடு வனப்பகுதியில் செந்நாய்கள் காட்டெருமைகளை வேட்டையாடும் காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன.

களக்காடு,

களக்காடு வனப்பகுதியில் செந்நாய்கள் காட்டெருமைகளை வேட்டையாடும் காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன.

வேட்டையாடும் செந்நாய்கள்

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால்குரங்கு, செந்நாய்கள், நீலகிரி வரையாடு, கடமான் உள்ளிட்ட அரியவகை உயிரினங்கள் வசிக்கின்றன. இந்த நிலையில் வனப்பகுதியின் பாதுகாப்பை கருதியும், வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து அறியவும், சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளார்களா என்பதை கண்காணிக்கவும் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் 115 இடங்களில் அதிநவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பதிவான காட்சிகளை வனத்துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் செந்நாய்கள் கூட்டம் காட்டெருமைகளை வேட்டையாட விரட்டி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

அழிந்து வரும் இனம்

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் அறிக்கைபடி செந்நாய்கள் கூட்டம் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவில் செந்நாய்கள் இருப்பதும், அவைகள் ஆரோக்கியமாக சுற்றி திரிவதும் குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் செந்நாய்கள் கடமான் உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு வெளியேயும் விரட்டி வந்து வேட்டையாடுவதை அப்பகுதி மக்கள் பார்த்து உள்ளனர்.

இந்த தகவலை களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story