கனரக வாகனங்களில் கூடுதலாக எடை ஏற்றுவது தொடர்பான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்


கனரக வாகனங்களில் கூடுதலாக எடை ஏற்றுவது தொடர்பான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 Sep 2018 12:01 AM GMT (Updated: 9 Sep 2018 12:01 AM GMT)

கனரக வாகனங்களில் கூடுதலாக எடை ஏற்றி செல்வது தொடர்பான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.

கரூர்,

கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சரக்கு ஆட்டோ, லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்களில் அதன் தரத்தை பொருத்து கூடுதலாக எடையை ஏற்றிக்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு டாரஸ் லாரியில் அதன் எடையுடன் சேர்த்து 25 டன்னுக்கு பொருட்களை ஏற்றி வந்தவர்கள், தற்போது 28 டன் வரை ஏற்றி கொள்ளலாம். கனரக வாகனங்களின் ஆர்.சி. புத்தகம் உள்ளிட்டவற்றில் பதிவு அச்சு எடை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த தேசிய அனுமதி மற்றும் தமிழ்நாடு அனுமதி பெற்ற சரக்குகளை ஏற்றி செல்லும் கனரக வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் பதிவுச்சான்று, அனுமதிச்சீட்டு ஆகியவற்றை கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து, உயர்த்தப்பட்ட அச்சு எடையினை மேற்குறிப்பு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த வாகன உரிமையாளர்கள் மேற்கண்ட அசல் ஆவணங்களுடன், நடப்பில் உள்ள காப்புச்சான்று, புகைச்சான்று, நடப்பு வரி ரசீது ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும் பதிவுச்சான்றில் மேற்குறிப்பு கட்டணம் ரூ.525 மற்றும் அனுமதிச்சீட்டில் மேற்குறிப்பு கட்டணம் ரூ.550 என மொத்தம் ரூ.1,075-ஐ அதற்கான வரியுடன் சேர்த்து செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். உயர்த்தப்பட்ட அச்சு எடையினை மேற்குறிப்பு செய்து சான்றிதழ் பெற நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிப்பதற்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story