தர்மபுரி மாவட்டத்தில் 810 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்க முகாம்


தர்மபுரி மாவட்டத்தில் 810 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்க முகாம்
x
தினத்தந்தி 9 Sep 2018 11:30 PM GMT (Updated: 9 Sep 2018 7:05 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 810 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்க முகாம் நடைபெற்றது.

தர்மபுரி,

1.1.2019-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்வது தொடர்பாக அனைத்து வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்காளர் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1,472 வாக்குச்சாவடி மையங்களில் வரையறுக்கப்பட்ட 810 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தேர்தல் அலுவலர்கள், தாசில்தார்கள் பார்வையிட்டனர். இந்த முகாம்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை பார்த்து அறிந்து கொண்டனர். மேலும் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பது தொடர்பான மனுக்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுத்தனர்.

நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்தில் 93 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எச்சனஅள்ளி சண்முகம் தலைமையில் தி.மு.க.வினர் ஒன்றிய பொருளாளர் சித்தன், துணை செயலாளர் கண்ணன், ராஜகோபால் ஆகியோர் வாக்களர் பட்டியலை சரிபார்த்து, பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்படி 20-க்கும் மேற்பட்ட நபர்கள் பண்டஅள்ளி வாக்குச்சாவடியில் புதிய வாக்காளர்களாக சேர விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்கினர்.


Next Story