கொள்ளிடம் புது பாலத்தில் 7 தூண்களுக்கு ஆபத்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


கொள்ளிடம் புது பாலத்தில் 7 தூண்களுக்கு ஆபத்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 10 Sep 2018 10:45 PM GMT (Updated: 10 Sep 2018 6:58 PM GMT)

வெள்ளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பினால் கொள்ளிடம் பாலத்தின் 7 தூண்கள் பிடிமானம் இன்றி ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திருச்சி,

கர்நாடக மாநிலத்தில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த ஜூலை மாதம் மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை தாண்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது.

இதனால் திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கினால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்த 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்பு பாலத்தின் 3 தூண்கள் கடந்த மாதம் 18-ந்தேதி நள்ளிரவில் இடிந்து விழுந்தது. உடைப்பு ஏற்பட்ட பகுதியின் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.

ஏற்கனவே வலுவிழந்த நிலையில் போக்குவரத்துக்கு தகுதியற்றது என அறிவிக்கப்பட்டு இருந்ததால் இரும்பு பாலம் இடிந்தாலும் எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை. 3 தூண்கள் இடிந்ததை தொடர்ந்து 24 தூண்களுடன் 800 மீட்டர் நீளத்திலான அந்த பாலத்தின் இரு பகுதிகளும் பொதுமக்கள் நடமாட முடியாதபடி அடைக்கப்பட்டன.

கொள்ளிடம் இரும்பு பாலம் இடிந்து விழுந்ததற்கு வெள்ளப்பெருக்கு தான் காரணம் என்றாலும் ஆற்றில் அளவுக்கு அதிகமாக விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டதால் தான் மண் அரிப்பினால் தூண்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டது.

இடிந்து விழுந்த இரும்பு பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் போன்ற வடிவமைப்புடன் சுமார் ரூ.80 கோடியில் கட்டப்பட்டு அது ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததால் போக்குவரத்துக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை. புதிய பாலத்தின் வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது காவிரி ஆற்றில் மட்டும் தான் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளின் வழியாக மட்டுமே சிறிதளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் கொள்ளிடம் ஆறு தற்போது மணற்பாங்காக காட்சி அளிக்கிறது. ஆற்றின் கரையோர பகுதிகளில் மட்டும் தண்ணீர் ஓடை போல் சென்று கொண்டிருக்கிறது.

கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் இல்லாததால் புதிய பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் நன்றாக வெளியே தெரிகிறது. கொள்ளிடம் புதிய பாலத்தையும் 24 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதில் 17 முதல் 23 வரையிலான 7 தூண்கள் வெள்ளத்தில் ஏற்பட்ட மணல் அரிப்பினால் பிடிமானம் இன்றி காட்சி அளிக்கின்றன.

ஆற்றின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 15 அடி உயரத்துக்கு ஏற்கனவே இருந்த மணல் எல்லாம் அடித்து செல்லப்பட்டு விட்டதால் அஸ்திவார தூண்களின் கீழ் பகுதி வரை வெளியே தெரிகிறது. இதனால் புதிய பாலமும் வலுவிழந்து அதன் தூண்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்படலாம்.

கர்நாடகத்தில் பெய்த தென் கிழக்கு பருவ மழையினால் தான் மேட்டூர் அணை நிரம்பியது. உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டு கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மண் அரிப்பின் காரணமாக புதிய பாலத்திற்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பாலத்தை தாங்கி நிற்கும் அஸ்திவார தூண்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஏற்கனவே இரும்பு பாலத்தில் உடைந்த விழுந்த தூண்கள், கற்கள் ஆகியவை ஆற்றுக்குள்ளேயே ஆங்காங்கு மலைக்குன்றுகள் போல் குவிந்து கிடக்கிறது. இவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சலவை தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story