கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளின் தாய், விஷம் குடித்து தற்கொலை முயற்சி


கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளின் தாய், விஷம் குடித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 10 Sep 2018 9:30 PM GMT (Updated: 10 Sep 2018 7:12 PM GMT)

கணவர் இறந்த பிறகு கருணை அடிப்படையில் வேலை கிடைக்காத விரக்தியில் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர், 


கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. எதிர்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதால் நேற்று மனு கொடுப்பதற்காக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர்.

அப்போது பகல் 12.45 மணியளவில் பொதுமக்கள் அமரும் இடத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தபடி ஒரு பெண் மயங்கி கிடந்தார். அருகே அவரது 2 மகன்களும் அழுதபடி அங்கே நின்று கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த அங்கிருந்தவர்களும், போலீசாரும் மயங்கி கிடந்த பெண்ணை நோக்கி ஓடோடி சென்றனர். அவரது அருகில் பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது. இதனால் அந்த பெண் பூச்சி மருந்து குடித்ததில் மயங்கி கிடப்பது தெரியவந்தது.

உடனே அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விசாரணையில் அவர் திட்டக்குடி தாலுகா இளமங்கலம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த ராக்கெட் ராஜா மனைவி சிவசக்தி(வயது 30) என்பது தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், திட்டக்குடியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த ராக்கெட் ராஜா மஞ்சள் காமாலை நோயால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் வாங்கிய ரூ.5 லட்சம் கடனை தீர்க்க முடியாமலும், 2 மகன்களை வளர்க்க முடியாமலும் சிவசக்தி தவித்துவந்துள்ளார். பி.எஸ்சி., எம்.எட்., படித்துள்ள அவர் மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் 2 முறை மனு கொடுத்தும் வேலை கிடைக்காத விரக்தியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story