பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடைகளை அடைத்து போராட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடைகளை அடைத்து போராட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2018 11:00 PM GMT (Updated: 10 Sep 2018 7:45 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்ட 471 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

முழு அடைப்புக்கு புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் ஆதரவு தெரிவித்து இருந்தது. இதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை முதல் புதுக்கோட்டை நகரில் உள்ள கீழராஜவீதி, மேலராஜவீதி, டி.வி.எஸ்.கார்னர், பழைய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு சில கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

இதனால் புதுக்கோட்டை நகரில் உள்ள கடைவீதிகள் வெறிச்சொடி காணப்பட்டன. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி, இலுப்பூர், அன்னவாசல், திருமயம், ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை, கீரனூர், கறம்பக்குடி, மணமேல்குடி, கீரமங்கலம், பொன்ன மராவதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒரு சில கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதனால் அந்த பகுதிகளில் உள்ள முக்கியமான கடைவீதிகள் நேற்று வெறிச்சொடி காணப்பட்டன. ஆனால் அறந்தாங்கி, ஆலங்குடி, விராலிமலை, கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் நேற்று திறந்து இருந்தன. வழக்கம்போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர்கள் முருகேசன், தர்மதங்கவேலு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தி.மு.க. சார்பில் பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ., நகர செயலாளர் நைனாமுகமது, காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் இப்ராகிம்பாபு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அடைக்கலசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஷாஜகான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அஷ்ரப்அலி, மனிதநேய மக்கள் கட்சி அப்துல்கனி, ஆம்ஆத்மி சார்பில் அப்துல் ஹமீது உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இதேபோல் புதுக்கோட்டை கீழ 4-ம் வீதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீரனூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் ஆகியோர் தலைமை தாங்கினர். மறியலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 60 பேரை புதுக்கோட்டை டவுன் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமையன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 60 பேரை கந்தர்வகோட்டை போலீசார் கைது செய்து, அதே பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். அறந்தாங்கி பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை அறந்தாங்கி போலீசார் கைது செய்தனர்.

பொன்னமராவதியில் ஆட்டோவை கயிற்றால் கட்டி இழுத்து சென்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ராசு ஆகியோர் தலைமை தாங்கினர். மறியலில் ஈடுபட்ட 81 பேரை பொன்னமராவதி போலீசார் கைது செய்தனர். கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் செங்கோடன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 40 பேரை கறம்பக்குடி போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குடியில் சந்தைப்பேட்டையில் இருந்து வடகாடு முக்கம் வரை திருவரங்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்கமணி தலைமையில் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 72 பேரை ஆலங்குடி போலீசார் கைது செய்தனர். கீரனூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 34 பேரை கீரனூர் போலீசார் கைது செய்தனர்.

அன்னவாசல் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 21 பேரை அன்னவாசல் போலீசார் கைது செய்தனர். ஆவுடையார்கோவிலில் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வீரையா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 17 பேரை ஆவுடையார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

மணமேல்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 21 பேரை மணமேல்குடி போலீசாரும், விராலிமலை செக்போஸ்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கருப்பையா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேரை விராலிமலை போலீசாரும் கைது செய்தனர். இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மொத்தம் 11 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 471 பேரை போலீசார் கைது செய்து, அந்தந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story